சென்னை மெட்ரோ ரயில் பணியில் சேர நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கல்வித்தகுதி உள்ளதாகக் கூறி வேலை வாய்ப்பில் உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றது. இது குறித்தான அறிவிப்பில் டிப்ளோமோ கல்வித்தகுதி இருந்தால் போதும் எனவும், கூடுதல் கல்வித்தகுதி இருந்தால் விண்ணப்பம் ஏற்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கூடுதல் கல்வித்தகுதி கொண்டவர்கள் பணியில் அமர்த்தப்பட்டாலும் அந்தப் பணியிலிருந்து நீக்கப்படுவர் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த விதிமுறையைக் கருத்தில் கொள்ளாமல் விண்ணப்பித்த லட்சுமி பிரபா என்னும் விண்ணப்பதாரருக்கு மெட்ரோவில் பணி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து தனக்கு பணி வழங்காததை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் "நான் டிப்ளமோ படித்துவிட்டு, பி.இ படித்துக்கொண்டிருந்தேன். பி.இ. தேர்வு முடிவு அப்போது வெளியாகவில்லை. அப்போது மெட்ரோ வேலை வாய்ப்பு வந்ததால் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். ஆனால், கூடுதல் கல்வித் தகுதியைக் காரணம் காட்டி எனக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, இன்று இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வேலைக்கு விண்ணப்பிக்கும்போது தன்னிடம் பி.இ சான்றிதழ் இல்லை எனவும், பின்புதான் அதனைப் பெற்றேன் எனவும் கூடுதல் கல்வித்தகுதியைக் காரணம் காட்டி மெட்ரோ நிர்வாகம் செய்வது எனது வேலைவாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் செயல் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து, பி.இ தேர்வில் வெற்றி பெற்றது தெரிந்தும் அதை மறைத்து இந்த வேலைக்கு மனுதாரர் விண்ணப்பித்திருக்கிறார் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மெட்ரோ நிர்வாகத்தின் வாதத்தை ஏற்று நீதிபதி, "வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை மறுக்கவில்லை. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதி உள்ளதற்காக வேலை வாய்ப்பில் முன்னுரிமை கோர முடியாது" எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.