சென்னை: மத்திய அரசால் கொண்டு வரப்படவுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
சென்னையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஆகிய அமைப்புகளின் சார்பில் "உயர் கல்வி எதிர்கொண்டுள்ள சவால்கள்' என்ற தலைப்பில் சென்னையில் தேசிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
கணித அறிவியல் நிறுவனம்
இந்த கருத்தரங்கில் பேசிய கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், கல்வியாளருமான ஆர்.ராமானுஜம் மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
புதிய கொள்கை
இதில் புதிய கல்விக் கொள்கை குறித்து கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், விஞ்ஞானியுமான ஆர்.ராமானுஜம் பேசியது:
சரியல்ல...
புதிய கல்விக் கொள்கைக்கான விவாதப் பொருள்களிலிருந்து அந்தக் கொள்கை எப்படியிருக்கும் என்பதை நாம் அறிய முடிகிறது. இந்தக் கொள்கை சரியல்ல. இதை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும்.
நிர்வாக ரீதியில்...
இந்தக் கொள்கை கல்வி தொடர்பான பிரச்னைகளை முழுக்க, முழுக்க நிர்வாக ரீதியான பிரச்னையாகவே பார்க்கிறது. கல்வியின் ஆன்மாவை இது தொடவில்லை.
இந்த விவாதப் பொருள்களில் ஆசிரியர்கள் மிகவும் தரக்குறைவானவர்களாகப் பார்க்கப்படுவதை அறியலாம்.
அதிக பேர் உயர் கல்வி பெற முடியவில்லை...
அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் கல்வியைப் பெற முடிவதில்லை. உயர் கல்வி நிறுவனங்களுக்குள் அவர்களால் இன்னமும் வர முடியவில்லை என்பதுதான் இப்போதைய பெரிய உண்மை.
நோக்கம் என்ன....
ஆனால், இந்தியாவில் உருவாக்குவோம் என்கிற திட்டத்துக்காக பள்ளிப் படிப்பு முடித்த மாணவர்களிலிருந்து தொழிலாளர்களை உருவாக்குவதாகவே இந்தப் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
தொழில் நிறுவனங்களின் நலன்கள், மதவாதக் கொள்கைகள் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து புதிய கல்விக் கொள்கையாக தரப்பட உள்ளது.
எல்லோருக்கும் வேலையா....
எல்லோருக்கும் வேலை தரப்போகிறோம் என்கிற புதிய கொள்கையை எதிர்ப்பது சுலபமல்ல. ஆனால், கல்வி பற்றிய அக்கறை கொண்ட அனைவரும் எதிர்க்க வேண்டியதுதான் இந்தப் புதிய கொள்கை. உயர் கல்வியில் அடிப்படையான மாற்றங்கள் தேவை. ஆனால், இந்த மாற்றங்கள் தேவையில்லை என்றார் அவர்.