உதகை: உதகை அரசு கலைக்கல்லூரியில் மே 4 ஆம்தேதி முதல் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உதகை அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன், "2015-16 ஆம் கல்வியாண்டில் அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் மே மாதம் 4 ஆம்தேதி முதல் கல்லூரிó அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.
ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை ரூபாய் 27 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் சாதி சான்றிதழின் நகலை சமர்ப்பித்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் முதல் மே மாதம் 18 ஆம் தேதி வரை பெறப்படும்.
மே 20 ஆம் தேதி மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள அறிக்கை பலகையில் ஒட்டப்படும். அன்றே மாணவர்களுக்கு குறுந்தகவல் மூலமாகவும் செய்தி அனுப்பப்படும்.
தரப்பட்டியலின் விபரங்கள் கல்லூரி வலைதளமான www.govtartscollegeooty.org.in இல் வெளியிடப்படும். மாணவர்கள் சேர்க்கை மே 25 ஆம் தேதி முதல் 29 ஆம்தேதி வரை ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.