அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அரசுப் பணிகளுக்கு பொது தகுதித் தேர்வு மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப்-ஏ, குரூப்-பி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
இவற்றில், மத்திய அரசின் குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கு பல தேர்வு வாரியங்கள் மூலம் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்த பணியிடங்களுக்கு ஒரே தேர்வு வாரியத்தின் மூலம் பொதுத் தகுதி தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியங்களான ரயில்வே, எஸ்எஸ்சி, வங்கி பணியாளர் என அனைத்து தேர்வாணையத்தின் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் ஜித்தேந்திர சிங் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை 3 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம் எனவும், குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அதனை உயர்த்திக் கொள்ளும் வகையில் மேலும் இருமுறை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், இந்த பொதுத் தகுதி தேர்வினை இணைய வழியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் குறுகிய காலத்திலேயே பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.