சென்னை: 5 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியருடன் அரசு பள்ளி இயங்கி வரும் அவலம் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
சிவகங்கை மாவட்டம் வீரவலசை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில்தான் இந்த அவல நிலை.

இந்தப் பள்ளி சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ள வீரவலசை கிராமத்தில் உள்ளது. இங்கு 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனாலும் இந்தத் தொடக்கப் பள்ளிக்கு தங்களது பிள்ளைகள் யாரையும் இங்கு அனுப்புவதில்லை. 5 மாணவர்கள் மட்டுமே படிக்கும் இந்தப் பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் மட்டுமே உள்ளார்.
இந்தத் தொடக்கப்பள்ளியில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. தற்போது முதல் வகுப்பில் 2 மாணவர்கள், இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவர், நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பில் தலா ஒரு மாணவர் என மொத்தம் 5 மாணவர்கள் மட்டுமே இருக்கும் அவல நிலை உள்ளது. தலைமை ஆசிரியர் மட்டுமே இந்த 5 மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
இப்பள்ளிக்கு நியமிக்கப்பட்ட மற்றொரு ஆசிரியர், மாணவர்களின் எண்ணிக்கை குறைவால், உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் அலுவலகப் பணிகளைச் செய்ய வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர் லீவ் எடுத்தால் மட்டுமே அவர் பள்ளிக்கு வருவார்.
கிராமத்திலுள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை வேறு தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி விடுவதால் இந்த நிலை. இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் வேறு பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பி விடுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அப்துல்ரஹீம் கூறியது: வீரவலசை பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக அப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு தாற்காலிகமாக மாற்றப்ப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறோம்," என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












