சென்னை : மருத்துவப் படிப்புக்கு 2வது நாளில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2017-2018ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் ஜூன் 27ந் தேதியிலிருந்து விநியோகிக்கப்படுகிறது, கோவை இ.எஸ்.ஐ கல்லூரியில் நேற்று முதல் விநியோகம் ஆரம்பமானது.
2வது நாளாக நேற்றும் விண்ணப்ப விநியோகம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை பதிவிறக்கம் செய்து அனுப்பும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்த ஆண்டு அந்த நடை முறை இல்லை என கூறப்பட்டிருந்தது. இதனால் நேரடியாக விண்ணப்பங்களை வந்து வாங்குவதற்காக மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக மீண்டும் ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் www.tnhealth.org என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதன் பின்னர் அதை பதிவிறக்கம் செய்து அனுப்பலாம். மருத்துவ படிப்புக்கு முதல் நாளில் 8 ஆயிரத்து 379 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருந்தன.
2வது நாளாக நேற்று அரசு கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9 ஆயிரத்து 597 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆயிரத்து 405 விண்ணப்பங்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 2 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜ் தெரிவித்தார்.
வருகிற 7ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 8ந் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியை சென்றடையுமாறு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
செயலாளர்,
தேர்வுக்குழு,
மருத்துவ கல்வி இயக்கம்,
162 ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை - 600010