கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது, நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா நோய்த தொற்றின் காரணமாக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்த கல்வியாண்டிற்கான காலமும் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளை திறக்கமுடியாத சூழலே தொடர்ந்து நிலவி வருகிறது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து விட்டார்.
இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளிலும் வரும் ஜூலை 13ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியில் வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த ஆன்லைன் வழியிலான வகுப்புகளில் கிராமப்புற மாணவர்கள் பங்கேற்பது என்பது கேள்விக்குறியானது எனவும், இதற்கு மாற்று வழியை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகளை எழுந்துள்ளது.