சென்னை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறையை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் நேற்று தொடக்கிவைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டே ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை செயல்படுத்தினோம். இதில், சுமார் 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தததைத் தொடர்ந்து இதைப் பின்பற்றி அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் முறையைச் செயல்படுத்தியுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.எஸ்சி., வேளாண்மை, 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் ( (5 year Integrated Courses), பி.எஃப்.எஸ்ஸி., (Batchalor of Fisheries Science) ஆகிய படிப்புகளுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 6-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.annamalaiuniversity.ac.in இமெயில் முகவரி: auadmission2016000gmail.com ஆகும். மேலும் விவரங்களுக்கு 04144-238348, 238349 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார் செ.மணியன்