சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கையை அப்பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் துவங்கி வைத்தார்.
இப்பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்பம் வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.
பின்னர் பேசிய அவர், "முதல் முதலாக சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது மாணவ-மாணவிகள் யாரும் தொலைதூர கல்வி நிறுவனத்திற்கு நேரில் வரத்தேவை இல்லை. அவர்களுக்கு பல்வேறு அலுவல்கள் இருக்கலாம். மாணவர் சேர்க்கைக்காக மணிக்கணக்கில் கால் கடுக்க வரிசையில் நிற்கத்தேவை இல்லை.
போக்குவரத்து செலவும் இருக்காது. எனவே நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகளின் நலன் கருதி இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு மாணவர் சேர்க்கைக்கான பணத்தை ஆன் லைனில் கட்டிவிடலாம். மாணவ-மாணவிகள் தொலைதூர கல்வி நிறுவனத்திற்கு வராமலேயே வீட்டில் இருந்தபடியே பட்டப்படிப்பில் அல்லது முதுநிலை படிப்பில் சேர்ந்துவிட முடியும்.
ஆனால் நேரில் வந்தும் சேரலாம். பழமையான அந்த முறையை எடுக்கவில்லை. அதுவும் அமலில் உள்ளது. மேலும் புதிதாக எம்.எஸ்சி. சைபர் பாரன்சிக்ஸ் அண்ட் இன்பர்மேசன் செக்யூரிட்டி என்ற படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த படிப்பு படித்தால் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இது தவிர முதுகலை டிப்ளமோ படிப்பில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேலாண்மை, ஆஸ்பிட்டல் மேலாண்மை, லாஜிஸ்டிக் மற்றும் விநியோக செயின் மேலாண்மை ஆகிய படிப்புகளும் கொண்டுவரப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












