சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 19-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியை ரூ.10 கோடியில் ஒப்புயர்வு மையமாக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரியில் முதுநிலை பல் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 42-இல் இருந்து 58-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 27 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்க ஆணையை தற்போது அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பல் மருத்துவத்துக்கென தனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதைத் தொடர்நது தமிழகத்தில் மேலும்,ஒரு புதிய பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தென் பகுதியில் தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார். இதனை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.