டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்றுள்ளார் மீராபாய் சானு. அதோடு, கரணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் பதக்கம் வென்ற 2-வது வீராங்கனை என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.
இன்று நாடே கொண்டாடி வரும் மீராபாய் சானுவின் முழு விபரங்கள், சாதனைகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் காணலாம் வாங்க.
ஒரே விளையாட்டு விராங்கனை
ஜூலை 23ஆம் தேதி அன்று ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் தொடங்கி நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 26 வயதான சாய்கோம் மீராபாய் சானு 49 கிலோ எடை பிரிவில் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றார். இந்தியாவின் சார்பில் பளு தூக்குதல் பிரிவில் பங்கேற்ற ஒரே விளையாட்டு வீராங்கனையும் இவர் தான்.
இரும்புப் பெண்மணியின் ஊர்
இந்தியாவின் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவின் சொந்த மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள நோங்பாக் காக்சிங் தான் மீராபாய் சானு பிறந்து, வளர்ந்த கிராமம். அவரது பெற்றோர் நிரந்தர வேலையின்றி அடிப்படைத் தேவைக்கு சிரமப்பட்டு வந்த நிலையில் அதே கிராமத்தில் இயங்கி வந்த பள்ளியில் ஆரம்ப கல்வியை படித்துள்ளார் மீராபாய்.
விளையாட்டின் மீது ஆர்வம்
மீராபாய் தனது 9-ம் வயதில் பள்ளி விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று டிவியில் விளையாட்டு தொலைக் காட்சியை பார்த்து கொண்டிருந்த போது தான் குஞ்சரணி தேவி பளு தூக்குதலில் 2004 ஒலிம்பிக்கில் அசத்திக் கொண்டிருந்தார். அதை பார்த்து தான் என் மகளுக்கும் பளு தூக்குதலில் ஆர்வம் வந்தது என்கிறார் மீராபாய் சானுவின் தாய்.
சொன்னதை செய்த மீராபாய்
அந்த போட்டி முடிந்தவுடன் இந்தியாவிற்கு நான் பளு தூக்குதலில் பதக்கம் வென்று தருவேன் என்ற ஆர்வத்தோடு வீட்டு வாசலில் கிடந்த நீளமான ஒரு குச்சியை தூக்கி விளையாட ஆரம்பித்தது தான் இன்று உலகவே உற்று நோக்க வைத்த வெற்றியின் முதல் படி.
சைக்கிளில் சென்று பயிற்சி
போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், தன் கிராமத்தில் செயல்பட்டு வந்த இளைஞர் மன்றத்திற்கு சென்று மீராபாய் உடற் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதோடு, கூடுதல் பயிற்சிக்காக தங்கள் கிராமத்திற்கு பக்கத்தில் இருந்த பளு தூக்கும் பயிற்சி மையத்திற்கும் சைக்கிளில் பயணம் செய்து பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவின் சிறந்த வெயிட் லிப்டர்
தனது இளமைப் பருவத்தில் கிராமத்தின் அருகில் நடைபெறும் போட்டிகள், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தனது முத்திரையை பதித்து வந்த மீராபாய், 2013ல் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் சிறந்த வெயிட் லிப்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் தங்கம்
கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் 194 கிலோவை தூக்கி நிறுத்தி தங்கத்தையும், 2020இல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் 49 கிலோ எடைப் பிரிவில் வெண்கலமும் வென்றுள்ளார் மீராபாய் சானு.
டோக்கியோ ஒலிம்பிக் 2020
தற்போது டோக்கியோ ஒலிம்பிக் 2020 பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். 49 கிலோ பளு தூக்கும் பெண்கள் பிரிவில் இந்தியாவின் சானு சைக்கோம் மீராபாய் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவே. இதர போட்டியாளர்களுக்கு இது ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது.