அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து மேம்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசுப் பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுவதாக ஆண்டுதோறும் கூறப்படுகிறது. இருப்பினும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால், அடிப்படை வசதிகள் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் பள்ளிக் கல்வித் துறையினர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலைத் தடுத்து அவர்களுக்குச் சிறந்த கல்வி வழங்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக் கல்விக்கென ரூ.28 ஆயிரத்து 757 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. இருப்பினும் அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தனியார் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பும் தேவையாக இருக்கிறது.
எனவே, பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளைத் தத்தெடுத்து பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளான சுற்றுச் சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்த முன்வர வேண்டும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி கடந்த ஆண்டில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிதியைப் பயன்படுத்தி 519 அரசுப் பள்ளிகளில் ரூ.58 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.
அதேபோல நடப்பாண்டிலும் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க விரும்புவோர் முன்வரலாம். அப்படி வருவோருக்கு அனுமதி வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கேலிக்கூத்தான அரசு:-
மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய பல்வேறு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வசூளிக்கப்படும் வரிப்பணத்தால் மேம்படுத்த வேண்டிய அரசு நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழக அரசு, மதுக்கடைகளை மட்டும் தனியார் வசம் விடாமல், தானே லாப நோக்கில் செயல்படுத்தத் துடிப்பது ஏன் என பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.