சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்காக புதிய மாணவர்களுடன் நடப்புக் கல்வியாண்டில் பழைய பிளஸ்-2 மாணவர்களுடன் மோதவுள்ளனர்.
எந்த ஆண்டு இல்லாத அளவாக இந்த ஆண்டில் (2015-16) மொத்தம் 4,679 பழைய மாணவர்களும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
நடப்புக் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ். படிப்பில் சேர்வதற்காக மொத்தம் 31, 525 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப்பட்டியலை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதற்கான கவுன்சிலிங் ஜூன் 19-ம் தேதி ஓமந்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியது.
இந்த நிலையில் புதிய மாணவர்களுடன், கடந்த ஆண்டுகளில் பிளஸ்2 படித்துவிட்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும் இந்த படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைக்காதவர்கள் இந்த ஆண்டில் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுபோல விண்ணப்பம் செய்துள்ள பழைய மாணவர்களின் எண்ணிக்கை 4,679 ஆகும்.
2013-14 கல்வி ஆண்டில் 1,503 பழைய மாணவர்களும், 2014-15 கல்வி ஆண்டில் (கடந்த ஆண்டு) 1,266 பழைய மாணவர்களும் விண்ணப்பித்தனர். ஆனால் அதை விட 3 மட ங்கு அதிகமாக 4,679 பேர் விண்ணப்பம் செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அவர்களும் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டில் பிளஸ் 2 உயிரியல், இயற்பியல், வேதியியல் தேர்வுகள் ஓரளவு கடினமாக இருந்ததால், எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய இந்த முக்கியப் பாடங்களில் 200-க்கு 200 எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்தே 4,679 பழைய மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர ஆர்வம் காட்டி விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் பழைய மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பழைய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைக் கடிதம் பெறும் நிலையில், அது வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாகும் என்று கூறியுள்ளது.
புதிய மாணவர்களுடன் இணைந்து, பழைய மாணவர்களும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பம் செய்து, தரவரிசைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளதால் சேர்க்கைக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது.