சென்னை : வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சுருக்கமாக நபார்டு வங்கி என்று அழைக்கப்படுகிறது. இதில் 108 அதிகாரிப் பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நபார்டு வங்கியில் பணியாற்ற விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.07.2017ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மொத்த காலியிடம் - 108
பல்வேறு பிரிவுகளில் உதவி மேலாளர் (கிரேடு ஏ) பணிக்கு 91 பேரும், மேலாளர் பணிக்கு 17 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
வயது வரம்பு -
உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.06.2017 தேதியில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02.06.1987 மற்றும் 01.06.1996 ஆகிய தேதிகளுக்கு உட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி -
பொருளாதாரம், வேளாண்மை பொருளாதாரம், வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை -
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலாளர் பணிகள் -
மேலாளர் (கிரேடு பி) பணிக்கு 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு 01.06.2017 தேதியில் 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 07.07.2017ந் தேதியாகும்.
மேலும் விபரங்களுக்கு www.nabard.org என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.