சென்னை: யுனிசெஃப் பூடானுடன், ஹரியாணாவைச் சேர்ந்த ஓ.பி. ஜிந்தால் பல்கலைக்கழகம்(ஜேஜியு) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளது.
பூடானில் சமூகக் கொள்கைளை சிறந்த முறையில் அமல்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருக்கு பயிற்சியளிக்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு சமூகக் கொள்கைகள் குறித்த சான்றிதழ் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தற்போது இந்தப் படிப்புகள் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் கவர்ன்மெண்ட் அண்ட் பப்ளிக் பாலிசி(ஜேஎஸ்ஜிபி), ராயல் யுனிவர்சிட்டி ஆஃப் பூடானின்(ஆர்யுபி) ஷிருப்ட்ஸே கல்லூரி ஆகியவற்றுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படிப்புகள் இந்தக் கல்லூரியில் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுனிசெஃப்-பூடானின் பிரதிநிதி ஷாகின் நிலோபர் கூறியதாவது:
அடுத்த சில ஆண்டுகளில் மத்திய வருவாய் நாடாக பூடான் மாறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதற்காவே இந்தப் படிப்பைத் தொடங்கியுள்ளோம். நாட்டின் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் தன்னிறைவு அடைவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.