சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றாமல் பிறப்பிக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டக்கல்லூரிகளில் 186 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை. எனவே பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நாடு விடுதலையடைந்து 72 ஆண்டுகள் கடந்த பின்னரும், சட்டக்கல்லூரிகளில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக நியமிக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் போதுமான கவனம் செலுத்தாத பல்கலைக்கழக மானியக்குழு, பார் கவுன்சில், தமிழக சட்டக்கல்வி இயக்குநரின் செயல் கண்டனத்துக்குரியது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தமிழக சட்டத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி அறிவிக்கப்படாத உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முறையாகவும் முழுமையாகவும் பின்பற்றி மற்ற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலை சட்டத்துக்குட்பட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும். இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய யுஜிசி சிறப்பு ஆய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.