தனியார் பள்ளியிலிருந்து மாற்றுப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே சேர்த்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் பல தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக, தனியார் பள்ளியில் ஒரு வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பிற்குச் செல்லும் போது அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் தராமல் மிரட்டுவதாகவும் பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே மாணவர்களை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், தனியார் சுயநிதி பள்ளிகள், மாணவர்களின் கட்டணத்தை நம்பியே செயல்படுவதாகவும், யார் யார் வேறு பள்ளிக்கு செல்கிறார்கள் என்ற விவரங்கள் தெரியாவிட்டால் பள்ளி நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படும் என்றும் மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வேறு பள்ளிக்கு மாறுவதற்கு மாணவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளதாக கூறினார்.
மேலும், இதற்காக மாற்றுச் சான்றிதழ் கேட்டு தற்போது படிக்கும் பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பம் பெற்ற ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும். இல்லை என்றால் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.