சென்னை : மின்பொறியாளர் பணியிடங்களுக்கான நேர்காணலில் எல்லாமே வெளிப்படையாக இருப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள புகார்களையும் அவர் மறுத்துள்ளார். இதில் எந்த ரகசியமும் இல்லை என்றும் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கமணி கூறியிருப்பதாவது:
நேர்காணலில் மர்மம் இல்லை
மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான கட் ஆப் மார்க்குகளும் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியல் மற்றும் கட் ஆப் மதிப்பெண்களை தேர்வு எழுதிய அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பட்டியல் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. நேர்க்காணல் மர்மமாக நடக்கிறது என்பதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகளாகும்.
நடத்தை விதிமுறை காரணமாக
சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சென்னை மின்சாரவாரியத்தில் வைத்து நேர்க்காணலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் வைத்து நடத்த முடியாததால் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து மின் பொறியாளருக்கான நேர்க்காணல் நடைபெறுகிறது.
கேட்டுப் பாருங்கள்
விதிமுறைகளுக்கு உட்பட்டே மின் பொறியாளர்கள் நேர்க்காணல் வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. நேர்க்காணலில் பங்குபெற்றவர்களிடம் கேட்டால் அது பற்றிய உண்மைகள் தெரியும். தமிழகத்தின் தினசரி மின் தேவை 14 ஆயிரம் மெகாவாட் ஆகும். ஆனால் தற்போது 18 ஆயிரம் மெகாவாட் அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே கோடைக் காலத்தில் மின் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்.
ஒளிவுமறைவில்லாமல்
மின்பொறியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் வெளிப்படையாக நடக்கிறது போல துணை வேந்தர் பணியிடங்களுக்கான நியமனமும் ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதற்காக கவர்னரால் ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் தகுதியுடன்
கூடுதல் தகுதி வாய்ந்த மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் இருந்து தகுதியான ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அவரே புகழ் பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்படுவார் என பி. தங்கமணி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












