அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுத் துறைக்கும் (டான்செட்) நீடித்துவரும் பல்வேறு கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து பல்கலைக் கழக நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக துணை வேந்தர் சுரப்பா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக துணைவேந்தர் கூறியிருப்பது தவறானது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழகம்
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டிற்கு முன்பு துணைவேந்தர் இன்றி மூன்று பேரைக் கொண்ட நிர்வாகக் குழுவால் இயங்கிவந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் வந்த பிறகு நீதிபதி சிர்புர்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவனும், ஆட்சிக்குழு சார்பில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஞானமூர்த்தியும் நியமிக்கப்பட்டனர்.
துணை வேந்தர் பட்டியல்
இந்தக் குழு மூன்று பேரைக் கொண்ட பட்டியலை தயார்படுத்தி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமர்விற்கு சமர்ப்பித்தது. அதில், பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவராகப் பதவிவகித்த பேராசிரியர் தேவராஜ், சென்னை ஐஐடியின் கணிதத் துறை பேராசிரியர் பொன்னுசாமி, பெங்களூர் ஐஐஎஸ்சியைச் சேர்ந்த சூரப்பா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கர்நாடகாவிலிருந்து துணை வேந்தர்
அப்பட்டியலில் இருந்த மூன்று பேரில் புதிய துணைவேந்தராக எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியரை அண்ணா பல்கலைக் கழகத்துக்குத் துணைவேந்தராக நியமித்தால், நிர்வாகத் திறன்கொண்ட கல்வியாளர்கள் யாருமே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும். கர்நாடகாவைச் சார்ந்தவரை நியமிப்பது கண்டிக்கத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாது என பல தமிழக எதிர்க் கட்சியினரும் மாணவர்களும் தெரிவித்தனர்.
நியமனம்
மாணவர், எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்பையும் மீறி சூரப்பா பதவி ஏற்று பணியாற்றி வந்த நிலையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) நடத்தும் வகையில் திருத்தம் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
மோதல் போக்கு
இதனிடையே, உயர் கல்வித் துறைக்கும் (டான்செட்) அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக, உயர் கல்வித் துறை அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பப்பட்டு வந்த நடைமுறையை நிறுத்தியது, பணியாளர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை நிறுத்தியது போன்ற அதிரடி நடவடிக்கைகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா எடுத்தார்.
பொறுப்பைத் துறந்த சூரப்பா
இதன் காரணமாக, துணை வேந்தர் சூரப்பாவிற்கும் தமிழக உயர் கல்வித் துறைக்கும் மோதல் போக்கு மூண்டது. அதன் ஒரு பகுதியாக, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் குழுவில் இணை தலைவராக தொழில்நுட்ப கல்வி இயக்குநரை தமிழக அரசு நியமித்தது. இதனால் அந்தக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகினார். இதன் காரணமாக, 2019- 20ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாகத் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகமே நடத்துகிறது.
முட்டுக்கட்டை போட்ட தமிழக அரசு
இந்நிலையில், பல்கலைக் கழகத்தின் நிதி நிலையை உயர்த்துவதற்காக, ஒரு சில கட்டணங்களை உயர்த்த பல்கலைக் கழகம் முடிவு செய்தது. இதற்கு அனுமதி மறுத்து, கட்டண உயர்வுக்குத் தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டது.
அரசியல் தலையீடு
இதனிடையே அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா செய்தியாளர்களைச் சந்திக்கையில், அண்ணா பல்கலைக் கழக நிர்வாக செயல்பாட்டில் அரசியல் தலையீடு உள்ளது என தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தமிழக முதலமைச்சர்
அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா கூறியிருந்ததிற்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இப்போது அவர் பேசியதாவது:-
இதுதான் தவறான செயல்.!
அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக அப்பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருப்பது தவறானது. தமிழகம் முழுவதும் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.