ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வட மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு புது முறையில் பாடம் கற்பித்து வருகிறார் பள்ளி ஆசிரியர் ஒருவர்.
கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் பல தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்திவருகின்றனர்.
இருப்பினும், தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களில் பின்தங்கிய கிராமப்புற மக்களிடையே இன்னும் இணையதள வசதிகள், அதற்கான சாதனங்கள் இல்லாத நிலையில் அங்குள்ள குழந்தைகள் இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், அரியானாவில் ஜாஜ்ஜார் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் சத்யநாராயணன் சர்மா என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்துள்ளார். தற்போது ஊரடங்கின் காரணமாக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இவர் ஏற்பாடு செய்து தந்துள்ள ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வண்டியில் ஒரு ஆசிரியர் சென்று பாடம் நடத்துகிறார்.
இதனால், குறிப்பிட்ட இடத்தில் மாணவ, மாணவிகள் வந்து பாடக் குறிப்புகளை எடுத்துக்கொள்கின்றனர். பாடங்களில் சந்தேகம் இருந்தால் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து, அங்கு தன்னை சந்தித்து தேவையான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளார் அவர். இந்த புதுமையான முயற்சி அப்பகுதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.