இனி வரும் கல்வி ஆண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளைத் துவக்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு நிபுணர் குழு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உயர் கல்வியின் தரம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் நிலை குறித்து ஆராய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஐதராபாத் ஐ.ஐ.டி.,யின் தலைவர், மோகன் ரெட்டி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பின் இக்குழுவின் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ தலைவர் சகஸ்ரபுதே கூறியதாவது :-
பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களின் எண்ணிக்கை காலியாக உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக கல்லூரிகள் உள்ளன. எனவே, அடுத்த கல்வி ஆண்டு முதல், புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
வழக்கமான எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளுக்கு மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டாம். அதற்கு மாறாக நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, முப்பரிமாண தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றுக்கு புதிய பாடங்களை அனுமதிக்கலாம் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications












