நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளை விற்க த்திய அரசிற்கு உட்பட்ட உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளிகளின் அருகில் நொறுத்துக் தீனிகளின் கடைகள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவற்றில் பெரும்பாலும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களே விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், இதுபோன்ற ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளால் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பள்ளி கேன்டின் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடைகள் குறித்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
அதில், பள்ளி கேன்டீன்களில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலும், நொறுக்குத்தீனிகள் தான் உள்ளன. தரமற்ற கொழுப்பு, காரம், உப்பு, இனிப்பு நிறைந்த இதுபோன்ற உணவுகள் கேடு விளைவிக்கக் கூடியவை. எனவே, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் கேன்டீன்களில் நொறுக்குத்தீனி விற்கவும், அது தொடர்பான விளம்பரப் பதாகைகள் வைக்கவும் தடை விதிக்கப்படுகிறது.
மேலும், பள்ளி கேன்டீன் மட்டுமின்றி பள்ளிகளைச் சுற்றி 50 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளுக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனைக் காக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், மாணவர்கள் நொறுக்குத்தீனி சாப்பிடுகிறார்களா என பள்ளி நிர்வாகம் தனிக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.