சென்னை : தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 11 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என உயர்கல்வி முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் உயர்கல்வி முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் இன்று வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் இந்த வருடம் 11 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என தெரிவித்தார். 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு மாணவ மாணவர்களுக்காக கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கலைஅறிவியல் படிப்பிற்கு அதிக மவுசு
என்ஜீனியரிங் படிப்பில் மாணவ மாணவியர்களின் ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது. கலை அறிவியல் படிப்புகளில் மாணவ மாணவியர்கள் அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளதால்தான் இந்த நிலைக் காணப்படுகிறது. நீட் தேர்வு போன்ற பிரச்சனைகளாலும், என்ஜீனியரிங் படிப்பிற்கு கலை அறிவியல் படிப்பை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், மேலும் என்ஜீனியரிங் படித்த பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதாலும் மாணவர்களிடையே கலை அறிவியல் படிப்புகளில் ஆர்வம் அதிகமாக வந்துள்ளது.
கலை அறிவியல் படிப்பிற்கு கட் ஆப் அதிகரிப்பு
கடந்த 20 வருடமாக பொலிவு இழந்த கலை அறிவியல் படிப்பிற்கு இந்த வருடம் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. அதனால் கலை அறிவியில் கல்லூரிகளின் கட்ஆப் மார்க் அதிகரித்து இருக்கிறது. வேதியியல், இயற்பியல், தாவரவியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது. ரசாயனம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மையமாக வைத்தே இநதப் பாடபிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்து வருகிறார்கள்.
பிகாம் படிப்பிற்கும் நல்ல வரவேற்பு
பி.காம் படிப்பிற்கும் மாணவர்களிடையே நல்ல வரவேற்புக் காணப்படுகிறது. மேலும் 3 ஆண்டு டிகிரியை முடித்து விட்டு குரூப் தேர்வை எழுதி ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் உயர் பதவிகளுக்கும் பட்ட மேற்படிப்புகளுக்கும் சென்று விடலாம் என்று மாணவ மாணவியர்கள் கூறுகின்றனர். அதிக பணத்தை செலவழித்து என்ஜீனியரிங் படிப்பை முடித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பதை விட குறைந்த செலவில் கலை அறிவியல் படிப்புகளை படித்து விட்டு அரசு வேலை மற்றும் உயர்படிப்புகளை தொடர்வதையே மாணவ மாணவியர்கள் விரும்புகின்றனர்.
கடல் சார்ந்த படிப்புகளுக்கும் அதிக மவுசு
இந்த வருடம் கடல் சார்ந்த படிப்புகளும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. சாகசம் நிறைந்த கடல் சார் படிப்புகளை இந்த வருடம் பலரும் தேர்வு செய்து வருகிறார்கள். இந்தியாவில் 6 இடங்களில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளன. தமிழகத்தில், உத்தண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் கடல்சார் பல்கலைக்கழகம் இருக்கிறது.
மாணவர்கள் தங்கள் திறமைக்கும் ஆர்வத்திற்கும் தீணிப் போடும் வகையில் உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்து விடா முயற்சியுடம் படிக்கும் போது கட்டாயம் வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர முடியும் என்பதில் ஐயமில்லை.