மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக மக்கள் மற்றும் எதிர் கட்சிகளின் தொடர் இந்தி எதிர்ப்பு முழக்கங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய கல்விக் கொள்கை
நாடு முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கை அமலில் உள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில் இந்திய மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த கல்வி கொள்கையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு முடிவு செய்தது.
தேசிய கல்விக் கொள்கை
இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கைகளை உருவாக்க டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2016-ம் ஆண்டு பல்வேறு பரிந்துரைகளை வரையறுத்து அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இந்த அறிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
கஸ்தூரி ரங்கன்
மக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, வேறு ஒரு புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு குழு அமைக்கப்பட்டதில், அந்த குழுவில் 8 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் நாடு முழுவதும் ஆய்வு செய்து புதிய பரிந்துரைகளுடன் அறிக்கை தயாரித்தனர்.
புதிய வரைவு
கஸ்தூரி ரங்கன் குழுவானது கடந்த வெள்ளிக் கிழமையன்று ஓர் அறிக்கையினை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. உடனடியாக அந்த அறிக்கை இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது. 484 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் நாடு முழுவதும் கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதிய திட்டங்களுக்கான யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மும்மொழிக் கொள்கை
அந்த புதிய வரைவில் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது மொழி "இந்தி"
அதாவது, இந்தியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும். இந்தி அல்லாத மற்ற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் 3-வது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வலுத்த இந்தி எதிர்ப்பு
ஆனால் இந்த பரிந்துரைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மத்திய அரசு திட்டமிட்டு இந்தியை தமிழக மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மத்திய அரசு தனது பரிந்துரையை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.
அதிர்ச்சியில் மத்திய அரசு
கஸ்தூரிரங்கன் குழுவின் புதிய அறிக்கை இணையதளத்தில் வெளியான சில மணி நேரத்துக்குள் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. 1965-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது மிகப்பெரிய எழுச்சி இருந்தது. அத்தகைய எழுச்சி மீண்டும் உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என திட்டங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.
மாற்றப்பட்ட வரைவு
அதன்படி கடந்த இரு தினங்களாக மத்திய அரசு அதிகாரிகள் கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையில் உள்ள எந்தெந்த பரிந்துரைகளை மாற்றம் செய்யலாம் என ஆலோசித்து வந்தனர். இந்நிலையில், வரைவு திட்டத்தில் செய்யப்பட்டுள்ள அந்த முக்கிய மாற்றங்கள் தற்போது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பின்வாங்கிய இந்தி
திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.
மும்மொழித் திட்டம் மாறவில்லை
மூன்றாவது மொழியை மாணவர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் வரைவு திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்திதான் படிக்க வேண்டும் என்ற கட்டாய நிலையிலிருந்து வேறு மொழியையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எந்த மாற்றமும் இல்லை
கஸ்தூரிரங்கன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மும்மொழி கல்வி திட்டத்துக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. மூன்று மொழிகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாணவர்கள் மூன்றாவது மொழியாக தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.