சென்னை: எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக் கடிதம் தரப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி தெரிவித்தார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. இந்தக் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை. இங்குதான் வரும் 25-ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை கவுன்சிலிங்கில் உத்தரவாதம் தரப்படக்கூடாது. மேலும் இந்த வழக்கில் வரும் தீர்ப்பைக் கொண்டே கவுன்சிலிங் அமையவேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் ஆஜரானார் அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி. அப்போத இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட மாட்டாது என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.
சென்னை, நந்தனத்தைச் சேர்ந்த டாக்டர் நல்லி ஆர்.கோபிநாத் உள்பட 60-க்கும் மேற்பட்ட இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர் கபிலன் ஆகியோர் சென்ற ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எதிராகத் தொடுத்த இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது.
அப்போது பேசிய சோமையாஜி, , "எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) மொத்தம் 31,525 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்; இவர்களில் 4,679 பேர் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த பழைய மாணவர்கள்; கட்-ஆஃப் மதிப்பெண்- சமுதாய ரேங்க் அடிப்படையில், பழைய பிளஸ் 2 மாணவர்களில் 548 மாணவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து நடைபெற உள்ள கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
எனவே மனுதாரர்கள் கூறுவது போல மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில் (2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள்), 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களில் (1,000-த்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள்) பழைய மாணவர்கள் சேரக் கூடும் என்பது அடிப்படை ஆதாரமற்றது. மேலும், கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தம் சுதந்திரமாக நடைபெற்றது என்று கூறுவதையும் ஏற்க முடியாது. அதை நிரூபிக்க அவர்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை'' என்றார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கவுன்சிலிங்கை நடத்தத் தடை இல்லை என்றும், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை சேர்க்கைக் கடிதத்தை அளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர். மேலும் வழக்கு ஜூன் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications












