வெளிநாடுகளில் மருத்துவப்படிப்பு (எம்பிபிஎஸ்) படித்தவர்கள் இந்தியாவில் டாக்டராக பணியாற்றுவதற்கான தகுதி சான்றிதழ் பெறுவதற்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவம் படிக்க கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படித்து வருகின்றனர். வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள் எப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக (உள்ளுறை மருத்துவர் பயிற்சி) ஓராண்டு பணியாற்றிவிட்டு, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்தால் தான் இங்கு டாக்டராக பணியாற்ற முடியும்.

அதன்படி, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு நடப்பாண்டு தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதத்தில் தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தால் (என்எம்சி) வழங்கப்பட்ட தகுதிச் சான்று அவசியம் ஆகும். அத்தகுதிச் சான்று இல்லாதவர்கள் அதற்காக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவப் பதிவு மற்றும் நன்னெறி வாரியத்தின் (இஎம்ஆர்பி) இயக்குநர் மருத்துவர் ராஜ் கிருஷண் போரியா, உறுப்பினர் மருத்துவர் விஜயலட்சுமி நாக் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் ஏப்ரல் 30-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் விவங்களுக்கு இணையதளத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.
கடந்த முறை தகுதிச் சான்றிதழ் கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் பல்வேறு தவறுகள் இருந்தன. அதைத் தவிர்க்கும் வகையில் விண்ணப்பதாரர்கள் சுயமாக அதனை பூர்த்தி செய்ய வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள செல்போன் எண்ணை மட்டும் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறுகள், ஆட்சேபங்கள் குறித்து தகவல்களை அனுப்புவதில்லை.
இவ்வாறு தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவப் பதிவு மற்றும் நன்னெறி வாரியத்தின் (இஎம்ஆர்பி) இயக்குநர் மருத்துவர் ராஜ் கிருஷண் போரியா, உறுப்பினர் மருத்துவர் விஜயலட்சுமி நாக் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












