மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் 4 நிலைகளிலும் சிறப்பிடத்தைப் பெற்று சாதனைப்படைத்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், 2019ம் ஆண்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகம் இந்தியாவில் உள்ள 31 என்ஐடி-களிலேயே முதலிடத்தை தக்க வைத்துள்ளது. மேலும், அனைத்து பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 11-வது இடத்தில் இருந்த நிலையில், நடப்பாண்டில் 10-வது இடத்தை இந்த கல்வி நிறுவனம் பிடித்துள்ளது. அதேப் போல, கட்டிட நுண்கலைத்துறையில் நாட்டிலேயே 7-வது இடத்தையும். மேலாண்மைத் துறையில் 17-வது இடத்தையும் திருச்சி என்ஐடி பிடித்துள்ளது.
ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் வரிசையில் கடந்த ஆண்டு 34ஆவது இடத்திலிருந்த திருச்சி என்ஐடிக்கு இந்தாண்டு 24ஆவது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுதில்லியில் நடைபெற்ற இதற்கான விழாவில், குடியரசுத் தலைவரிடம் விருதுகளை பெற்ற திருச்சி என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் ஆர். சுப்பிரமணியம், தேசிய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் கே.கே. அகர்வால் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.