ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவல் எச்சரிக்கை அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஸ்ரீநகர் என்ஐடி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரகாலமாக ஜம்முவில் நீடித்து வந்த பதற்றத்தைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை உள்ளிட்டு சுற்றுலாப் பயணிகள் உடனே காஷ்மீரிலிருந்து வெளியேறுமாறு மாநில அரசு கடந்த வெள்ளியன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை மூடுவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால், ஏராளமான என்ஐடியில் படிக்கும் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.
இதனிடையே, மாவட்ட மாஜிஸ்டிரேட் ஷாஹித் சௌத்ரி, என்ஐடி-யை மூடும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கவில்லை. இன்றும், நூற்றுக் கணக்கான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
மேலும், கல்லூரி வளாகங்களுக்குக்கூட பாதுகாப்பு அளித்துள்ளோம். வகுப்புகளை ரத்து செய்ய தேவைப்படும்போது தனியே உத்தரவிடுவோம் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, என்ஐடி நிர்வாகம் வகுப்புகளை நிறுத்தும் அறிவிப்பை ரத்து செய்தது. இருப்பினும், வெளி மாநிலங்களில் ஸ்ரீநகரில் படித்து வரும் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்தனர். தற்போது, மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பைத் தொடர்ந்து அங்கே அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.