சென்னை: புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள், உபகரணங்களை உருவாக்கும் உயரிய நோக்கில், தேசிய மருத்துவத் தொழில்நுட்ப வள மையத்துடன் (என்.எச்.எஸ்.ஆர்.சி.) அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை சமீபத்தில் செய்துகொண்டுள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உள்நாட்டுத் தேவையை நிறைவு செய்யும் வகையில் மருத்துவ உபகரணங்கள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், புதிய மருத்துவத் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கும் வகையிலும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து தேசிய மருத்துவ உபகரண மேம்பாட்டு மையத்தை (என்.எச்.எச்.ஐ.டி) அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
இந்த மையம் பல்வேறு ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து புதிய மருத்துவத் தொழில்நுட்பம், மருத்துவ உபகரணங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
அடுத்த கட்டமாக, இந்த மையம் மத்திய அரசின் தேசிய மருத்துவத் தொழில்நுட்ப வள மையத்துடன் இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் மருத்துவத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை இணைந்து மேற்கொள்ளுதல், ஆய்வு செய்தல், அதுதொடர்பான பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இரண்டு அமைப்புகளும் இணைந்து மேற்கொள்ள உள்ளன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












