சென்னை: கோவை மாவட்ட பள்ளி கல்வித் துறைக்காக புதிதாக இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது தமிழக அரசு.
கோவை மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்தப் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிகக்கப்பட்டுள்ளது.
www.kovaischools.net என்ற முகவரியில் இந்த புதிய இணையதளத்தைத் தொடர்புகொண்டு விவரங்களை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்கள், மாணவர்கள் - ஆசிரியர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய இணையதளம் (https:tnschools.gov.in) செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள், இ-மெயில் முகவரி, கல்வி அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய புதிய இணையதளத்தை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்தப் புதிய இணையதளம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் என்.அருள்முருகன் கூறியது:
கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்களுக்குத் தேவையான கையேடுகள், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரி விடைத் தாள்கள், பாடத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்களை நாங்கள் வழங்கவுள்ளோம்.
ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகளுக்குத் தேவையான விவரங்கள், பணி வரன்முறை விவரங்கள், தேவையான விண்ணப்பப் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேவைப்படும் படிவங்களை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான விண்ணப்பப் படிவங்களை உடனுக்குடன் இணையதளத்திலிருந்து பெற முடியும்.
அதேபோல் கல்லூரிக் கல்வி பயில விரும்பும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டி விவரங்கள், கோவை மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தகவல்கள், கல்வியுடன் தொடர்புடைய பிற துறைகளின் இணையதளங்களுக்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய இணையதளம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உதவியாக இருப்பதுடன் கல்வித்துறை அதிகாரிகளை பள்ளிகளுடன் இணைக்கும் பாலமாகவும் இருக்கும். இதனால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது மாணவர்களும் பயன் அடைவர் என்றார் அவர்.