சென்னை: இசை, ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களுக்கு புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம்(State Council of Educational Research & Training) முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பாட வல்லுநர்கள், கல்வியாளர்கள், சிறப்பாசிரியர்கள் பங்கேற்கும் பயிலரங்கம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த 3 நாள் பயிலரங்கில் புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்படவுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்த சிறப்புப் படிப்புகளுக்கான புதியப் பாடத்திட்டம் 2006-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட இருந்தது. ஆனால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கோ, தலைமையாசிரியர்களுக்கோ பாடத் திட்டத்தின் நகல் எதுவும் அனுப்பப்படவில்லை.
இதன் காரணமாக, பாடத் திட்டமின்றியே சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு அவர்கள் பணியாற்றி வந்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சிறப்புப் பாடங்களுக்கான பாடத் திட்டம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் சிறப்புப் பாடங்களுக்கான பாடத் திட்டத்தை வெளியிட வேண்டும் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்புப் பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் 3 நாள் பயிலரங்கில் இதுதொடர்பான பாடத் திட்டம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.