அரசு கொண்டு வந்த அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக புதிய விதிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமல்படுத்தப்பட உள்ளன.
நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை நடைபெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதாவது ஒன்றாம் வகுப்பில் 100 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் அதில் 25 குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் இடம் தரவேண்டும். அந்த 25 குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்திவிடும். இந்தத் திட்டம் மூலம் ஏராளமான குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். ஏழை வீட்டுக் குழந்தைகள் கூட தனியார் பள்ளிகளில் பயின்று சாதனை படைத்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் சேரும் அனைத்து மாணவர்களின் கல்வி கட்டணத்தையும் அரசே பள்ளிகளுக்கு செலுத்தி விடும்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டம், 2009 பிரிவு 12 (1) (c) இன்படி அனைத்து தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை (எல்.கே.ஜி. மற்றும் 1 ஆம் வகுப்பு) குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது. இதை அனைத்துப் பள்ளிகளும் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சட்டத்தின்படி 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் அருகிலுள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெற உரிமை உண்டு, 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தை பள்ளியில் சேர்க்கப்படாத அல்லது கல்வியை முடிக்க முடியாத ஒரு குழந்தை வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும், 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தாலும், தொடக்கக் கல்வி முடியும் வரை இலவசம்,
தொடக்கக் கல்வி முடியும் வரை எந்தக் குழந்தையும் தடுத்து நிறுத்தப்படவோ , வெளியேற்றப்படவோ அல்லது போர்டு தேர்வில் தேர்ச்சி பெறவோ தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 2024 - 25ஆம் கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில் தற்போது ஆர் டி இ திட்டத்தின் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
தற்போது பள்ளிக் கல்வித் துறையானது இத்திட்டத்திற்கான புதிய வழிகாட்டு விதிகளை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி மாணவ, மாணவியின் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளிகள் இருந்தால் அந்த மாணவருக்கு அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்டிஈ இட ஒதுக்கீடு தரப்பட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இந்த சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அதிகளவு தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை கட்டுப்படுத்தவும் இந்த முடிவை அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












