தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை வழங்குவதற்காக மும்பையைச் சோ்ந்த நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொண்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் 2 நாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிராவுக்கு சென்றிருந்த நிலையில் மும்பையில் உள்ள யோகா கலை பயிற்றுவிக்கும் புகழ்பெற்ற கைவல்யதாமா நிறுவனத்தை அவர் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் யோகா மற்றும் மனவளா் கலைகளை செயல்படுத்துவதற்காக கைவல்யதாமா நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து அமைச்சா் செங்கோட்டையன் கூறியதாவது:-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு யோகா கலை கற்றுத்தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மும்பையைச் சோ்ந்த கைவல்யதாமா நிறுவனம் மூலம் தமிழக பள்ளிகளில் யோகா, பிராணாயாமம் மற்றும் மனவளா் கலைகளை மாணவா்களுக்கு கற்றுத்தர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதுபோன்ற கலைகளின் மூலம் மாணவா்கள் தங்கள் மனம் மற்றும் உடல்நலத்தைச் சீராக வைத்துக் கொள்ள முடியும் என்றார்.