சென்னை: இந்திய ஆட்சிப் பணி(ஐஏஎஸ்) பயிற்சி முடித்த இளம் அதிகாரிகள் 158 பேருக்கு டெல்லியில் முதல் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
வழக்கமாக ஐஏஎஸ் தேர்வாகும் மாணவர்கள் உத்தரகண்ட் மாநிலம், முசோரியில் ஐஏஎஸ் பயிற்சியை முடிப்பர்.
பின்னர் அந்த அதிகாரிகள், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேச பிரிவுக்குப் பணியாற்ற அனுப்பி வைக்கப்படுவர். அங்கு அவர்கள் சுமார் 10 மாதங்கள் வரை உதவி ஆட்சியர் அல்லது கூடுதல் ஆட்சியர் பணியைக் கவனித்து பயிற்சி எடுத்துக் கொள்வர். அதன்பிறகு முறைப்படி அவர்களுக்கான துறை, மாவட்டப் பணி ஆகியவை மாநில அரசால் ஒதுக்கப்படும்.
ஆனால் இந்த முறை மத்திய அரசு இந்த முறையை மாற்றிவிட்டது. அவர்களுக்கு முதல் பணி டெல்லியிலேயே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசின் "உதவிச் செயலர்' அந்தஸ்தில் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
மேலும் அவர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் வரும் 31-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை பணியாற்ற வேண்டும் என்று மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து புதிதாக தேர்ச்சி பெற்ற 158 அதிகாரிகள் டெல்லியில் தங்குவதற்கான தாற்காலிக ஏற்பாட்டை மத்திய அரசு செய்துள்ளது. டெல்லி யமுனை நதி அருகே உள்ள காமன்வெல்த் கிராமம் எனப்படும் நவீன வசதிகளுடன் கூடிய அரசுக் குடியிருப்புகள், ஹட்கோ பிளேஸ், கித்வாய் நகர், கர்ஜன் சாலை ஆகிய இடங்களில் உள்ள மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்குச் சொந்தமான அரசு விருந்தினர் இல்லங்கள், அரசு விடுதிகள் போன்றவற்றில் அதிகாரிகள் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 30-ஆம் தேதி வரை மத்திய அரசுப் பணியில் ஈடுபட்டதும் தங்களுக்கான மாநிலப் பிரிவு சேவைக்குத் திரும்ப அவர்களுக்கு உத்தரவிடப்படும் என்றும் அவர்களுக்கு மத்தியப் பணியாளர் நலத் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.