சென்னை: பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.15 ஆயிரம் என நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. இது இந்த கல்வியாண்டும், அடுத்த கல்வி ஆண்டுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் செயல்படும் சுயநிதி பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவ மாணவியர் ஆண்டு ஒன்றுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் அதற்காக நியமிக்கப்பட்ட கட்டண நிர்ணயக் குழு இந்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. பாலி டெக்னிக் கல்லூரிகள் அளித்த வரவு செலவு விவரங்களின் அடிப்படையிலும், ஆய்வுக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின் பேரிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு பருவத்துக்கு மாணவர்கள் ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும். அதில் கல்விக் கட்டணம், சேர்க்கை கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வுக் கூட கட்டணம், கணினி, இணைய தள சேவை, விளையாட்டு, பணியிட வாய்ப்பு பயிற்சி, பராமரிப்பு, அடிப்படை வசதிகள் செய்தல் ஆகியவை அடங்கும். இது தவிர ஓட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில் நுட்ப படிப்பு ஆகியவற்றுக்கு ஒரு பருவத்துக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணம் தொடர்பான உத்தரவை தமிழக அரசு நேற்று முன்தினம் மாலை வெளியிட்டது.