தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான நிதியை குறைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
25 சதவிகிதம்
தமிழகத்தில், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்து வருகின்றனர்.
நிதியுதவி
அரசு மற்றும் தனியார் என அனைத்துத் தரப்பு பள்ளிகளிலும் இது நடைமுறையில் உள்ளது. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் அல்லது அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருக்குச் செலவிடும் தொகையின் அடிப்படையில், தொகை நிர்ணயம் செய்யப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
மத்திய, மாநில அரசுகள்
தனியார் பள்ளிகள் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் பள்ளிகள் தோறும் ஆய்வு செய்து, மாணவர்களைத் தேர்வு செய்து கொடுக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதற்குரிய கல்வித்தொகையை மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்குகிறது.
யார் விண்ணப்பிக்கலாம் ?
இத்திட்டத்தில் சேர பள்ளியைச் சுற்றி 2 கிலோ மீட்டர் தொலைவில் வசிப்பவர்கள் இந்த விதியின் கீழ் விண்ணப்பித்து, இடங்களை பெறமுடியும். ஒவ்வொரு பள்ளியிலும் மொத்தமுள்ள இடங்களில் 25 சதவீதம் மாணவ, மாணவியர் இலவச கட்டாய கல்வியில் சேர்க்கப்படுவர். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இந்த சட்டம் பொருந்தாது.
ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.25 ஆயிரம்
மாநில அரசு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் தகவல் பெறப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் படி, 2016-17 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.25,385 முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.33,431 வரை கட்டணம் நிர்ணயித்த அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன், இதற்கான உத்தரவை அரசிதழில் வெளியிட்டிருந்தார்.
நிதி உதவியை குறைத்த செயலாளர்
இந்நிலையில், தற்போது செயலாளராக உள்ள பிரதீப் யாதவ் புதிதாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எல்.கே.ஜி, யூ.கே.ஜி, 1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 ஆயிரத்து 719 ரூபாய், 2ஆம் வகுப்பு 11ஆயிரத்து 748 ரூபாய், 3ஆம் வகுப்புக்கு 11 ஆயிரத்து 944 ரூபாய், 4ஆம் வகுப்புக்கு 11 ஆயிரத்து 928 ரூபாய், 5ஆம் வகுப்புக்கு 11 ஆயிரத்து 960 ரூபாய் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளார்.
அதிரடியாகக் குறைப்பு
இதுவரை இருந்த கட்டணத்திலிருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் சுமார் 12,000 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்புக்கான ரூ.11,719 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் 12,000 முதல் 12,500 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் தான் 2017-18ம் ஆண்டுக்கான கல்வி கட்டணமும், தனியார் பள்ளிகளுக்குச் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியில் தனியார் பள்ளிகள்
அரசின் புதிய வரைமுறையாள், தனியார் பள்ளிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அரசு நிதியை குறைத்துள்ளதால் மீதமுள்ள தொகையை பெற்றோர்களே செலுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் நிர்பந்தப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் பெற்றோர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசே..!
ஏற்கனவே, மாணவர்களின் எண்ணிக்கை குறைவான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், தற்போது இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள நிதியையும் குறைப்பதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கேள்விக் குறையாகியுள்ளது. கட்டாய கல்வி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் தமிழக அரசு இந்த முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












