சென்னை: கண் பரிசோதனை தொடர்பான புதிய படிப்பு தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கண் பரிசோதகருக்கான துணை மருத்துவப் படிப்பாகும் இது. சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவ நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த படிப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தமிழகத்தில் இதுபோன்ற படிப்பு அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். "பி.எஸ்சி. ஆப்டோமெட்ரி' என்பது இந்த படிப்புக்கான பெயர்.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படிப்பை அறிமுகம் செய்து வைத்தார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
பின்னர் நிகழ்ச்சியில் விஜயபாஸ்கர் பேசியதாவது:
இந்தப் படிப்பானது அரசு மருத்துவ நிறுவனங்களில் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும்தான் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் இந்தப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் கண் சம்பந்தமான பயிற்சிகள் அனைத்தும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வழங்கப்படும் என்றார் அவர்.
எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நமிதா புவனேஸ்வரி, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.


Click it and Unblock the Notifications












