சென்னை: சென்னையை அடுத்த சேலையூரில் அமைந்துள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்ற பாரத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ குத்து விளக்கேற்றி கலை, அறிவியல் கல்லூரியைத் தொடக்கி வைத்தார்.
பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:
மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதைப் பெருமையாகக் கருதிய காலம் மாறி, பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது கலை, அறிவியல் படிப்புகளுக்கு இப்போதும் உள்ள மவுசைக் காட்டுகிறது.
மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையின்றி தேர்ந்தெடுத்துப் படிக்கும் படிப்பை சிறப்பாகப் படித்து நிறைவு செய்தால் உரிய வேலைவாய்ப்பை நிச்சயம் பெற முடியும்.
ஆகவே கல்லூரியில் படிக்கும் இந்த 3 வருட காலத்தில் உங்களது கவனத்தை சிதற விடாமல் படித்தால் நீங்கள் சாதிக்க நினைக்கும் உயரத்தை எட்ட முடியும் என்றார் அவர்.
இந்த கலை, அறிவியல் கல்லூரியில் மற்ற கல்லூரிகளில் உள்ளது போன்ற படிப்புகளும், சில முக்கிய படிப்புகளும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார் பொன்னவைக்கோ. கல்லூரியில் சேர்க்கையும் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.