சென்னை : இளநிலை ஆராய்ச்சியாளர், உதவி போராசிரியர் பணிக்கு தகுதி பெற விரும்புபவர்கள் நெட் என்னும் தேசிய தகுதித் தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வு ஆண்டு தோறும் இரண்டு முறை நடத்தப்படுகிறது.
இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் உதவி போராசிரியருக்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.
ஆனால் பணி நெருக்கடி காரணமாக இந்த தேர்வை தம்மால் நடத்த முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அனுகி தெரிவித்தது.
இதனால் இந்த ஆண்டு நெட் தேர்வு நடத்தப்படுவதில் நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது. நெட் தேர்வு நடக்குமா, நடக்காதா என இந்த தேர்விற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் இந்த ஆண்டும் நெட் தேர்வு
ஜூலை மாதம் நடைபெறும் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) நேற்று (புதன் கிழமை) தெரிவித்துள்ளது. இந்த தேர்வினை வழக்கம் போல சிபிஎஸ்இயே நடத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
என்.டி.எஸ் என்னும் தேசிய தேர்வு பணிமையத்தை மத்திய அரசு அமைக்கிற வரையில் இந்த ஏற்பாடு தொடரும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் நெட் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.