மருத்துவப் படிப்புகளில் சேர உதவும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு, இன்றும், நாளையும் விண்ணப்பிக்க தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
NTA (National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது. இந்த அமைப்பை இந்தியாவின் கல்வி அமைச்சகம் (முன்னதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இருந்து வந்தது) தான் உருவாக்கியது. முன்னதாக மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வே பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி மற்றும் குஜராத்தி ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும். 2021-ல் இருந்து பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். வரும் கல்வி ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு,வரும் மே, 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் நிறைவுற்றது.
இந்நிலையில் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவை தவற விட்டதாகவும், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்குமாறும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டும் ஏராளமானோர் விண்ணப்பிக்க தவறினர். இதனால் உரிய நேரத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்காக தேசிய தேர்வு முகமை சிறப்பு வாய்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து, இன்றும், நாளையும் (ஏப்ரல் 9,10) நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேர்வு கட்டணத்தை, நாளை இரவு 11: 50 மணிக்குள் (ஏப்ரல் 10) செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://nta.ac.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மே 5ஆம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications












