நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே 5-ம் தேதியன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வைப் போலவே இந்த ஆண்டிலும் ஆடை, செப்பல், காதணிகள் என பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 நீட் தேர்வு!
நடப்பாண்டில் நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக நகரங்கள்!
இந்தியா முழுவதும் உள்ள 154 நகரங்களில் வரும் ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இவற்றில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாமக்கல், வேலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெற உள்ளது.
தமிழில் தேர்வு எழுதுவோருக்கு!
தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, ஒடிசா, வங்காளம், உருது, இந்தி ஆகிய 11 மொழிகளில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் மட்டும் அனைத்து நகரங்களிலும் தேர்வு நடைபெறும். தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளவர்களுக்குத் தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு முடிந்தவரை தமிழகத்திலும் கடைசி நேரத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு அருகில் உள்ள மாநிலத்திலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு நேரம்!
மே 5ம் தேதியன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு விடும். மதியம் 1.30 மணிக்கு மேல் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும். எனவே, மாணவர்கள் 1.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று அவரவர் இருக்கையில் அமர வேண்டும்.
நுழைவுச் சீட்டு!
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, அதில் அவர்களின் தேர்வு பதிவு எண் ஒட்டப்பட்டு இருக்கும். 1.30 மணி முதல் 1.45 மணி வரை தேர்வு குறித்த முக்கிய நடைமுறைகள் அறிவித்தல் மற்றும் ஹால் டிக்கெட் பரிசீலனை நடைபெறும். ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 1.45 மணிக்கு விடைத்தாள் தொகுப்பு தரப்படும். 1.50 மணி முதல் 2 மணி வரை தங்களைப் பற்றிய தகவல்களை விடைத்தாள் தொகுப்பில் பதிவு செய்ய வேண்டும்.
ஆள் மாறாட்டம்!
விடைத்தாளில் 2 மணி முதல் 5 மணி வரை விடைகளை எழுத அனுமதிக்கப்படுவர். 5 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் தேர்வு அறையைவிட்டு வெளியேற அனுமதி இல்லை. மேலும், ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் வருகைப் பதிவுத் தாளில் மாணவர்கள் தங்களது கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கெல்லாம் அனுமதி இல்லை!
தேர்வு எழுத பால் பாயிண்ட் பேனா ஒன்று தேர்வு மையத்திலேயே வழங்கப்பட உள்ளது. மேலும், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், ஜியோ மெட்ரிக்பாக்ஸ், கால்குலேட்டர் உள்ளிட்ட எதற்கும் அனுமதி இல்லை. கைப்பேசி, புளூடூத், கை கடிகாரம், பென்டிரைவ், காதணிகள், வளையல் போன்ற ஆபரணங்களுக்கும் கடந்த ஆண்டைப் போல அனுமதி இல்லை.
சட்டை கிழிந்திடும்..!
நீட் தேர்வு எழுத வருவோர் மென்மையான நிறத்திலேயே ஆடை அணிந்திருக்க வேண்டும். அரைக்கை சட்டைக்கு மட்டுமே அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணிந்து வருவோரின் சட்டை கடந்த ஆண்டைப் போலவே கிழித்து அனுமதிக்கப்படுவர். மத சார்பான அதிகம் உடல் மறைக்கும் ஆடைகள் அணிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு அறைக்கு வந்து ஆசிரியைகளின் சோதனைக்கு உட்பட வேண்டும். மேலும், தேர்வு மையத்துக்குள் ஷு அணியக்கூடாது. செருப்பு மட்டும் அனுமதிக்கப்படும். அதுவும் ஹைஹீல்ஸ் உள்ளதாக இருக்கக்கூடாது.
தேர்வு முடிவுகள் !
தற்போது நடைபெறவுள்ள இந்த நீட் தேர்விற்கான முடிவுகள் வரும் ஜூன் 5-ம் தேதியன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












