சென்னை : நீட் தேர்வு முடிவு பல சர்ச்சைக்குப் பின் நேற்று ஜூன் 23ந் தேதி வெளியிடப்பட்டது. அதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 14ந் தேதி வெளியிடப்படும், நீட் கலந்தாய்வு ஜூலை 17ந் தேதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு கடந்த மே மாதம் 7ந் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. பல சர்ச்சைக்குப் பின் அதன் முடிவு நேற்று ஜூன் 23ந் தேதி வெளியானது. நாடு முழுவதும் மொத்தம் 11 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் தேர்வினை எழுதினார்கள். அதில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 65,170 எம்பிபிஎஸ் மற்றும் 25,730 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15% இடங்கள் அகில இந்திய கவுன்சிலிங் மூலமும், மீதமுள்ள 85% இடங்கள் மாநில கவுன்சிலிங் மூலமும் நிரப்பப்படும்.
5 திருநங்கைகள் நீட் தேர்வில் தேர்ச்சி
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 221 பேர் ஆண்களும், 3லட்சத்து 45 ஆயிரத்து 313 பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்களை விட பெண்களே நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8 திருநங்கைகள் நீட் தேர்வினை எழுதினார்கள். அதில் 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எம்பிபிஎஸ் விண்ணப்பம்
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஜூன் 27ந் தேதியில் இருந்து ஜூலை 7ந் தேதி வரை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 22 எம்பிபிஎஸ் மற்றும் 1 பிடிஸ் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 8ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியல்
நீட் தரவரிசைப் பட்டியல் ஜூலை 14ந் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு ஜூலை 17ந் தேதி முதல் கலந்தாய்வு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் தனித் தனியாக தரவரிசைப் பட்டியல் வைத்திருப்பார்கள். நீட் தேர்வு அடிப்படையில்தான் கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு
குறைந்த பட்சம் மதிப்பெண்கள் நீட் தேர்வில் இருந்தால்தான் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது. குறைந்தது 50% மதிப்பெண்ணை மாணவ மாணவியர்கள் நீட் தேர்வில் பெற்றிருக்க வேண்டும். இதில் 15% இடங்கள் அகில இந்திய கவுன்சிலிங் மூலமும், மீதமுள்ள 85% இடங்கள் மாநில கவுன்சிலிங் மூலமும் நிரப்பப்படும்.