தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் (எம்டி, எம்எஸ்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் ஜெயகுமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் அவர் தெரிவித்திருந்ததாவது:-
2009ஆம் ஆண்டில் நான் எம்பிபிஎஸ் படித்து முடித்து, தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஜனவரி 6 -ஆம் தேதியன்று நடைபெற்ற முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 1200க்கு 385 மதிப்பெண் பெற்றேன்.
இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தமிழக பொதுச் சுகாதாரப் பணிகள் இயக்கத்தின் கீழ் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு 10 சதவிகித கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மருத்துவ அதிகாரிகளுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்குவதால், எங்களைப் போன்ற அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
எனவே தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு குறித்தான விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கிவிட்டதால் அதற்குத் தடை விதிக்க முடியாது. அதேநேரத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டார்.
மேலும், இந்தமனு தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்லூரி தேர்வுக் குழு செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.