டெல்லி: மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர உதவும் தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வை (என்இஇடி) அடுத்த ஆண்டு முதல் நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த ஆண்டு முதலே பொது நுழைவுத் தேர்வை நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மாநில அரசுகளும், தனியார் கல்லூரிகளும் தாங்களாகவே நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளன.
மேலும் நடப்புக் கல்வியாண்டிலேயே என்இஇடி தகுதித் தேர்வு நடத்தும் அளவுக்கு மாணவர்கள் தரப்பு தயாராகவில்லை என்று அவை தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் தில்லியில் நடத்த குழு கூ டியது. இதில் நடப்புக் கல்வியாண்டிலேயே என்இஇடி தேர்வு நடத்துவதற்கு உகந்த சூழல் இல்லை என்று கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்த விவகாரம் தொடர்பாக, விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில், என்இஇடி நுழைவுத் தேர்வை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 12 மாதங்களுக்கு தள்ளிவைப்பதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக இந்த ஆண்டு என்இஇடி தேர்வு இருக்காது என்றும், தரவரிசை அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை இருக்கும் என்று மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.