நீட் தேர்வைக் கண்டிப்பாக நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இதனை மறு சீராய்வு செய்ய வேண்டும் என 6 மாநில அரசுகள் முறையிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், கல்வியாளர்கள், எதிர்க்கட்சியினர் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தேர்வுகளை நடத்த பணிகளை மேற்கொண்டது.
அதன்படி தற்போது கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் ஜேஇஇ தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 13ம் தேதி நீட் தேர்வு தொடங்கப்பட உள்ளது.
முன்னதாக இந்தத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வுகளைக் கண்டிப்பாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி 6 மாநில அரசாங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று நீதிபதி அசோக் பூஷன், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.