நீட், ஜேஇஇ தேர்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் வசதிக்காக இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமையின் சார்பில் (NTA) ஜெஇஇ மெயின் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியன்றும் நடைபெறவுள்ளது. இதற்கு நாடு முழுவதும் இருந்து ஜேஇஇ தேர்விற்கு 9.53 லட்சம் மாணவர்களும், நீட் தேர்விற்கு 15.97 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகளவில் உள்ள நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தக் கூடாது என்றும், மாணவர்களின் பாதுகாப்பை இது கேள்விக்குறியாக்கும் என்றும் பல்வேறு தரப்பினரும் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா, உத்தரகண்ட், குஜராத், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் மத்திய அரசு இதனை மனதில் கொள்ளாமல் தேர்வு நடத்த தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேர்வு தேதிகளும் நெருங்கி வருவதால், மாணவர்களை தேர்விற்கு தயார்ப்படுத்தும் வகையில் நீட், ஜேஇஇ தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகின்றன.
அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நுழைவுத் தேர்விற்கான மாநில தலைமையகம் மற்றும் மாவட்ட தலைமையகங்களில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வகை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் 181 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ அல்லது mapit.gov.in/covid-19 என்ற இணையதளத்தில் பதிவு செய்தாலோ தேர்வு மையங்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
அதேப் போல, ஒடிசா மாநிலத்தில் மாணவர்கள் தங்கும் வசதிக்காக பொறியியல் கல்லூரி விடுதிகள் மற்றும் ஐடிஐ-க்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்குச் சிறப்பு உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அங்கு மாணவர்கள் நுழைவுத்தேர்வு தொடர்பான விவரங்களைத் தெரிவித்து இலவச பயணம் மற்றும் தங்குமிட வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். சத்தீஸ்கர் மாநிலத்திலும் இதே போல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.