கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை திரும்பத் தரக் கோரி வழக்கு தொடரத நிலையில் இந்த வழக்கு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் முறைகேடு செய்து பல்வேறு மருத்துவகல்லூரிகளில் சேர்ந்த சம்பவம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் முதன் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி விசாரணையில் நீட்தேர்வில் மோசடி செய்த 6 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், இதற்கு உதவிய ஒரு இடைத்தரகர் என 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய தரகர்கள், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு சர்ச்சைகள் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களைத் திரும்பத் தரக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுகுறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வந்தது. அப்போது, முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்களை எதிர்காலம் கருதி திருப்பித் தர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதற்கு, நீட் தேர்விற்காகக் கடினமாக படித்த பலரும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று கூறிய நீதிபதி பொங்கியப்பன், தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications












