சென்னை : நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்த மதுரை ஐகோர்ட்டு இது தொடர்பாக ஜூன் 7ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது.
திருச்சியை சேர்ந்த சக்திமலர்கொடி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் இந்தியாவில் மருத்துவம் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2013ல் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பாடங்களில் இருந்து தலா 45 மதிப்பெண் விதம் மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது நீட் தேர்வுக்கு எதிராக 115 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஏற்று நீட் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
பின்னர் இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி நீட் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 7ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது.
கேள்வித்தாளில் வேறுபாடு
இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும ஒரே நேரத்தில் நீட் தேர்வு நடக்கும் போது பிராந்திய மொழிகளில் வழங்கப்பட்ட வினாத்தாள்களில் ஒரே மாதிரியான வினாக்கள் கேட்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக நீட் தேர்வில் பிராந்திய மொழி வினாத்தாள்களில் வெவ்வேறு வகையில் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நீட் தேர்வில் வெவ்வேறான கள்விகளுடன் கூடிய வினாத்தாளின் அடிப்படையில் மருத்துவம் பல் மருத்துவ மாணவ சேர்க்கையை மேற்கொள்வது சட்டவிரோதம். குஜராத்தி இந்தி ஆகிய மொழிகளில் நடந்த தேர்வில் மட்டும் எளிமையான வினாக்களும், ஆங்கிலம் உள்பட மற்ற மொழித்தேர்வுகளில் கடினமான கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் ஆங்கிலத்தில் நடந்த தேர்வில் ஒருமாதிரியான வினாத்தாளும் தமிழில் இருந்த கேள்வித்தாளில் வேறு வகையான கேள்விகளும் இடம் பெற்றிருந்தது தெரிய வந்துள்ளது.
திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோகும்
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என அறிவிக்கப்படவும் இல்லை. கன்னடம் மராத்தி வங்காள மொழிகளில் தேர்வு எழுதியவர்களும் இதே பிரச்சினையை சந்தித்து உள்ளனர். இந்த பாகுபாட்டை அனுமதித்தால் ஒரு பிரிவினர் பயனடைவார்கள். மற்றொரு பிரிவினர் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பறிபோவதை ஏற்க முடியாது.
நீட் தேர்வு முடிவுக்கு தடை
நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் தகுதிப்பட்டியல் தயாரிக்க்ப்பட்டு வருகிறது. வருகிற ஜூன் 8ந் தேதி தேதர்வு முடிவு வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ செயலாளர் அறிவித்துள்ளார். எனவே கடந்த 7ந் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கி நீட் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
சிபிஎஸ்இ பதில் தரவேண்டும்
இதேபோல மதுரையை சேர்ந்த 9 பேர் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எம். வி. முரளிதரன் முன்வு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசு தரப்பில் வக்கீல் கே.ஆர்.லட்சுமணன் ஆஜராகி நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து சிபிஎஸ்இ பதில் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிபிஎஸ்இ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த வழக்கில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார்.
மறு விசாரணை ஜூன் 7ந் தேதி
இதையடுத்து நீட் தேர்வில் பாகுபாடு உள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளதால், நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த மனு குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர், சிபிஎஸ்இ தலைவர் அல்லது செயலாளர் மாநில சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டவர்கள் வருகிற ஜூன் 7ந் தேதிக்குள் பதில் அளிக்கவும், நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 7ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.