சென்னை : நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவ மாணவர்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது.
தமிழகத்தில் இதுவரை மாணவ மாணவியர்கள் பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் இந்தவருடத்தில் இருந்து எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் குழப்பம்
அதன்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மருத்துவ படிப்பில் சேர விருப்பம் உள்ள மாணவ மாணவியர்கள் நீட் தேர்வினை எழுதி விட்டு காத்திருக்கிறார்கள். முடிவு எப்போது வரும் என்பது தெரியாமல் மாணவ மாணவியர்கள் குழம்பி போய் இருக்கிறார்கள்.
நீட் தேர்வு முடிவு
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தமிழக சட்டசபையில் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவப் படிப்பிற்கு மாணவ மாணவியர்கள் சேர்க்கப்பட வேண்டும் என சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலங்களிலும், ஒவ்வொரு விதமான கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதால் நீட் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புகளுக்கு தான் முதலில் கலந்தாய்வு நடைபெறும். அதில் இடம் கிடைக்காத மாணவர்கள் தான் என்ஜீனியரிங் படிப்பை தேர்வு செய்து படிப்பார்கள். இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் என்ஜீனியரிங் படிப்பிற்கான கலந்தாய்வை எப்படி நடத்துவது என்று ஆலோசித்து வருகிறது.
நீட் தேர்வு முடிவில் தாமதம்
என்ஜீனியரிங் கலந்தாய்வை முதலில் நடத்தினால் என்ஜீனியரிங் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் கண்டிப்பாக என்ஜீனியரிங் படிப்பை உதறிவிட்டு மருத்துவ படிப்பில் சேருவார்கள். எனவே நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் எந்த படிப்பில் சேரலாம் என மாணவ மாணவியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். பெற்றோர்களும் குழம்பி போய் உள்ளார்கள். நீட் தேர்வு முடிவு எப்போது வரும், மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.