சென்னை : நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 1ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் மேலும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஏப்ரல் 5ம் தேதி வரை நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதி மன்றம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக் குறித்து ஒரு அசாதாரண சூழலே நிலவிக் கொண்டிருப்பதால் மாணவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். அதனால் பல மாணவ மாணவியர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்காமல் இருந்தனர்.
வயதுவரம்பு கிடையாது
விண்ணப்பிக்காமல் இருந்த மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்காக உச்சநீதி மன்றம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை கூடுதல் கால அவகாசத்தை அளித்துள்ளது. மேலும் நீட் தேர்விற்கான வயது வரம்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 25 வயதிற்கு மேற்பட்டவர்களும் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
நீட் தேர்வு
மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணமுடைய மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வினை எழுத வேண்டும். நீட் தேர்வு மூலம் மட்டுமே பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். நீட் தேர்வு என்பது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகும். இது மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்தத் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு மொழிகளில் தேர்வு
நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட எட்டு மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு
நீட் நுழைவுத் தேர்வு மூலம் அரசு கல்லூரிகளிலுள்ள தேசிய இடஒதுக்கீட்டிற்கான 15% இடம் நிரப்பப்படுகிறது. மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இட ஒதுக்கீடுத் தவிர மற்ற காலி இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
கால அவகாசம் நீட்டிப்பு
இந்த (2017) ஆண்டு மொத்தம் இதுவரை 11.35 லட்சம் பேர் நீட் தேர்விற்காக விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில், 88 ஆயிரத்து, 478 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். மேலும் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.